அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது, வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு அதிமுக சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.ல்.ஏக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேச ஆளும் திமுக அரசு மறுப்பதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.
40க்கு 40 அடுத்தது 200 கும் 200 வெற்றி பெறுவோம், விக்கிரவாண்டி தேர்தலில் டெபாசிட் இழக்க செய்வோம் என்று அடுத்தடுத்து தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது. அடுத்த தலைமுறை மக்களை பற்றி யோசிக்கவில்லை. இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் அளவுக்கு அதிமுக என்ன விதிமீறலில் ஈடுபட்டார்கள் என்று விளக்கம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.