விருதுநகர் அருகே கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞரை மதுரையில் ஆணவப்படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து- மாரியம்மாள் என்பவரின் மகனான அழகேந்திரன் (21). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி மதுரை வந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 24 ம் தேதி அழகேந்திரன் தனது உறவினரான மதுரை கள்ளிக்குடியில் உள்ள அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். தனது மகனை காணவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென கூறி காவல்துறையினர் கூறிய நிலையில் கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார். இதனிடையே காலை அழகேந்திரன் கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்து சென்ற பிரபாகரனை காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறி அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.