தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மொத்தம் 23 புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் சில:
தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த, விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும். சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார ஊக்குவிப்பு வெளியிடப்படும். பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.
படைப்பு திறன் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் வளர்ச்சி அடையும் வகையில், ஒரு செயல் திட்ட வரைபடம் வெளியிடப்படும்.
தொழிலகங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும், மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் தொடங்கப்படும். ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கு டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு உருவாக்கப்படும். சுற்றுலாத் துறையில், முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காகவும், அந்நிறுவனங்களுக்கான ஆதரவுச் சேவைகளை அத்திட்டங்கள் கண்காணித்திடவும், அளித்து, செயல்படுவதை வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் சுற்றுலாவை ஊக்குவித்து முதலீட்டை ஈர்க்கும் வண்ணம், சுற்றுலாதலங்களில் உகந்த இடங்களை சிப்காட் தேர்வு செய்து, தனியார் பங்களிப்புடன் சுற்றுலாதலங்களின் உள்கட்டமைப்பை ஏற்படுத்தும். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் சுமார் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.