ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்களை எமர்ஜென்சி காலத்தில் சிறையில் போட்டிருந்தாலும் கூட எங்களை இந்திரா காந்தி துன்புறுத்தவில்லை” என்று அவர் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் அவர் தானும் பத்திரிகையாளர் நலின் வர்மாவும் இணைந்து எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையில் இருவரும் பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடியுள்ளனர். 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான களங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட 2024-ல் எதிர்க்கட்சியை மதிக்காத அரசை நாம் மறைந்துவிடக் கூடாது என்று லாலுவும், நலினும் குறிப்பிட்டுள்ளனர்.
லாலு கூறியிருப்பதாவது:-
“அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தியிருந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணனால் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் வழிநடத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். அப்போது நானும் என்னுடன் இருந்தவர்கள் யாரும் இப்போது எமர்ஜென்சி பற்றிப் பேசுபவர்களை அங்கே பார்த்தது இல்லை. மோடி, நட்டா அவர்களின் அமைச்சரவையின் இன்னும் சில சகாக்களை நாங்கள் பார்த்தது இல்லை. இன்று அவர்கள்தான் சுதந்திரத்தின் மதிப்பீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் தள்ளியிருக்கலாம். ஆனால், அவர் எங்களை துன்புறுத்தல் செய்ததில்லை. அவருடைய அமைச்சர்கள் யாரும் எங்களை தேசத் துரோகிகள் என அழைத்தது இல்லை. இந்திய அரசியல் சாசனத்தை கட்டமைத்த அம்பேத்கரின் நினைவுகளைச் சிதைக்கும் வகையில் யாருக்கும் இந்திரா அதிகாரம் அளிக்கவில்லை. 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான களங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட 2024-ல் எதிர்க்கட்சியை மதிக்காத அரசை நாம் மறந்துவிடக் கூடாது.”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.