மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “முதலமைச்சர் கனவுடன் தற்போது சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்து கொள்கின்றனர். ஆனால் நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன். பூமாலை கிடைக்கும் என நினைக்க வேண்டாம், கைவிலங்கிட தயாராக வேண்டும். எனது 27 வயதில் பிரகடனம் செய்தது ”மக்களை அரசியல் படுத்துவோம்” எனும் கொள்கைதான். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால் மக்கள் மதுபானக்கடையை மூட சொல்கிறார்கள். மது ஒழிப்பு மாநாடு விசிக சார்பில் நடத்தப்பட உள்ளது.மேலவளவு படுக்கொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு பொறுப்புகள் இருந்தன. அதை செய்யவில்லை. போராட்டம், பேரணி என அரசியல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும் என நினைத்தவன் திருமா. அவ்வாறு செய்து இருந்தால் இந்த இயக்கம் வளர்ந்திருக்காது. விசிக நாடாளுமன்றம் வரை சென்று இருக்காது. கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
![விசிக சார்பில் செப் – 17ம் தேதி “மது ஒழிப்பு மாநாடு” – திருமாவளவன் பேட்டி!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/01/Thol.-thirumavalvan.jpg)