உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர்.
நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.