சினிமா உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகளை சித்தரிப்பதற்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள ஆங் மிச்சோலி என்ற படத்தில் மாற்றுத் திறனாளிகளை தவறாக சித்தரித்து அவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்சிகளும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் நிபுன் மல்ஹோத்ரா என்று சமூக நல ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சி ஊடகங்களிலும் சினிமாவிலும் தவறான சமூகப் புரிதலுக்கு வழிவகுக்கும் வகையில் மற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலான ‘ஊனம்’ முதலான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.அவர்கள் படும் சிரமங்களை மட்டுமே காட்சிப் படுத்தாமல், அவர்களின் முன்னேற்றம், திறமைகள், சமூகத்துக்கு அவர்கள் அளிக்கும் பங்கு ஆகியவற்றையும் காட்சிப் படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
மேலும் இதுதொடர்பான விஷயங்களை சென்சார் வாரியம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.