கேரள மாநிலம் கொச்சியில் நண்பர்களுடன் பந்தயம் வைத்து ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம் கொச்சி எடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் ஆண்டனி. இவருடைய மகன் ஆன்டனி ஜோஸ்(18) திருக்காக்கரை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஆன்டனி ஜோஸ் தன்னுடைய நண்பனின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காக சென்றார். அப்போது அவருடன் வேறு சில நண்பர்களும் இருந்தனர்.
எடப்பள்ளி ரயில் நிலையத்தை தாண்டித்தான் அவர்கள் கடைக்கு செல்ல வேண்டும். அப்போது ரயில் நிலையத்தில் ஒரு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. நண்பர்கள் அனைவரும் ரயிலின் அடிப்பகுதி வழியாக கடந்து சென்றனர். தன்னால் ரயிலின் மேற்பகுதி வழியாக ஏறி கடக்க முடியும் என்று ஆன்டனி ஜோஸ் நண்பருடன் பந்தயம் வைத்தார்.
அதன்படி ஏணி வழியாக ரயிலின் மேல் ஏறிய போது அங்கிருந்த மின் கம்பியில் எதிர்பாராத விதமாக அவரது கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி ஆன்டனி ஜோஸ் தூக்கி வீசப்பட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக இதுகுறித்து ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று
அவரை மீட்டனர்.
அதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆன்டனி ஜோஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.