சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் காலை சூரிய உதயம், மாலை அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவ்வப்போது கடலில் நீர்மட்டம் தாழ்ந்து விடும். அப்போது படகு சேவை தாமதமாகவே தொடங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக காலையில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து போனதால், படகு சேவை 10 மணிக்கு பிறகு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் (ஜூலை 9) 3வது நாளாக காலையில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்துவிட்டது. இதனால் படகு சேவை ரத்து செய்யப்படுமோ என சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர். ஆனால், படகுகளை இயக்கும் அளவிற்கு கடல் நீர்மட்டம் இருந்ததால் வழக்கம்போல 8 மணிக்கு படகு சேவை தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றதை பார்க்க முடிந்தது.