தென்காசியில் கிரிக்கெட் போட்டிக்குச் சென்ற போது அங்குள்ள ஓட்டலில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்தது உண்மைதான் என்று கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் பயிற்சியாளர் மனு போலீசிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
கேரளா கிரிக்கெட் சங்கத்தின் திருவனந்தபுரம் மாவட்ட பெண்கள் அணி பயிற்சியாளராக இருந்தவர் மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்காசியில் கிரிக்கெட் போட்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள ஓட்டலில் வைத்து தங்களை பயிற்சியாளர் மனு மிரட்டி பலாத்காரம் செய்ததாக 6 மாணவிகள் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வாளர்களுக்கும் கேரள கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் உடல்வாகு எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்க வேண்டும் என்று கூறி தங்களது ஆபாச புகைப்படங்களையும் எடுத்ததாக மாணவிகள் புகாரில் கூறினர்.
இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மனுவை கைது செய்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த தென்காசியில் உள்ள ஓட்டலுக்கு விசாரணைக்காக போலீசார் மனுவை கொண்டு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் ஒரு மாணவியை மட்டுமே பலாத்காரம் செய்ததாகவும் மற்ற மாணவிகளை பலாத்காரம் செய்யவில்லை என்றும் அவர் போலீசிடம் கூறினார்.
ஆனால், அதை போலீசார் நம்பவில்லை. விசாரணைக்கு பிறகு போலீசார் மனுவை திருவனந்தபுரம் கொண்டு வந்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த மனித உரிமை ஆணையம் கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போல ஒரு மாணவி மனு மீது பலாத்கார புகார் கொடுத்தார். ஆனால், அதன் பிறகும் மனுவை பயிற்சியாளர் பதவியில் தொடர் அனுமதித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.