மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்தடுத்து இவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது உலாஜ் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜங்கிளி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் ஐஎப்எஸ் அதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியில் வெளியான ’தடக்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து கவனம் பெறத் தொடங்கினார். இந்த நிலையில் பாலிவுட்டிலிருந்து நேரடியாக தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார் ஜான்வி கபூர். தெலுங்கில் தற்போது ஜூனியர் என்டிஆருடன் தேவாரா எனும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரான நானியின் படத்தில் ஜான்வி கபூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானியின் சூர்யாவின் சனிக்கிழமை படத்திற்கு பின்னர் அவரது 33-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்தை இயக்க உள்ளார். நானியின் 33-வது படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.