யாழ்ப்பாணத்தில் எம்.பி அல்லாத விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 190 மில்லியன் ரூபா திட்டங்களிற்கும் ரணில் அனுமதி
நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அபிவிருத்தி நிதியாக 50 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத அமைப்பாளருக்கு 190 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 50 மில்லியன் ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனிற்கான நிதி நேற்றுவரை அனுமதிக்கப்படவில்லை.
இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனிற்கு 150 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களிற்கான அபிவிருத்தி நிதிகளிற்கான நிதியை மாவட்டச் செயலகத்திற்கு விடுவித்ததோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 190 மில்லியன் ரூபா பெறுமதியிலான திட்டங்களிற்கும் விஜயகலா மகேஸ்வரனின் சிபார்சு எனக் குறிப்பிட்டு
நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.