பு.கஜிந்தன்
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.
‘வெலிக்கடை சிறைப்படுகொலை ‘ இடம்பெற்ற நாளான 25-07-2024 வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள ‘தந்தை செல்வா கலையரங்கில்’ நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுச் சின்னமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், சர்வமத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி ரகுராம், அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், முன்னைநாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், கலாநிதி ஆறு.திருமுருகன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.