(29-08-2024)
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இதன் போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று (29) மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதய ராஜா (வயது 36) என்பவராவார்.
வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்கு மூலங்களையும் பெற்றிருந்தார்.சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.