நான் எங்கும் ஓடி ஒளியவில்லை கேரளாவில் தான் இருக்கிறேன் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார். இந்த பரபப்பான சூழலில், மலையாள நடிகர் சங்க (அம்மா) முன்னாள் தலைவரும், பிரபல மூத்த நடிகருமான மோகன்லால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஹேமா கமிட்டி அளித்திருந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன்.
விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். பதில் சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் தான். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் உள்ளது. தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. எல்லாவற்றிற்கும் ‘அம்மா’ அமைப்பை மட்டுமே குறை கூற வேண்டாம்; அனைத்து கேள்விகளுக்கும் ‘அம்மா’ அமைப்பால் பதில் சொல்ல முடியாது. நான் ஓடி விட்டதாக பலர் பேசுகின்றனர். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை இங்கே.. கேரளாவில்தான் இருக்கிறேன்.” இவ்வாறு நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.