பு.கஜிந்தன்
கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் 3ம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது , மறைந்த ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடை நிறுத்திக்கொண்டார்.
இந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர். சுயாதீன ஊடகவியலாளராக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.