சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் (13.9.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலாத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த சிறப்பு நிலை அலுவலக உதவியாளர்
எம்.செல்வராஜின் வாரிசுதாரர்
செ.ராஜேஷ் (மகன்) கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை வழங்கினார்.
முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா 4 கார் பந்தயம் வெற்றி பெறும் வகையில் பணியாற்றியதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கலைவாணர் அரங்கில் வழங்கிய பாராட்டு சான்றிதழை, சுற்றுலாத்துறை அமைச்சரிடம் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது, ” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,24,318 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும், 2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 17,96,27,146 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி போட்டி, அலைசறுக்கு போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டினை விளையாட்டு சுற்றுலா மாநிலமாக மேம்படுத்தி வருகின்றார்கள்.
உலகின் முன்னணி நாடுகளின் சுற்றுலா வளர்ச்சிக்கு விளையாட்டுத்துறை மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீட்டர் நீள சாலைகளில் வெற்றிகரமாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் கவனத்தை தமிழ்நாட்டின் மீது பெரிய அளவில் ஈர்த்துள்ளது. சலைகளில் ஒரு பக்கம் கார் பந்தயமும், ஒரு பக்கம் சீரான போக்குவரத்தும் ஒரே நேரத்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தய வீடியோக்கள், அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு தமிழ்நாட்டின் திறமையை பறைசாற்றி வருகின்றன. பார்முலா 4 கார் பந்தயம் காரணமாக அதிக செலவு செய்யும் திறன் கொண்ட அன்னிய செலாவணியை அதிக அளவில் வழங்கும் வகையிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாக சென்னையும், தமிழ்நாடும் மேம்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அதனடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.12.92 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் செய்யும் பணிகளும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடத்தை ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கொல்லிமலை, நீலகிரி மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலை மற்றும் தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் ஆகிய மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரை, திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரி உள்பட தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அலுவலர்கள், மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.