பொன்ராம் இயக்கும் புதிய திரைப்படத்தில் சண்முக பாண்டியன் ரௌடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டின். இப்போது ‘படைத்தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் என்கின்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது. அந்த வகையில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளை சுற்றி இருக்கும் கிராமங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் பின்னணியாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன் ரௌடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் தார்னிகா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.