இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது. இது உலகளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் நேரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டார். ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது. எனவே நமது தேசம் இனஅழிப்புக்கு எதிராக செயல்பட வேண்டும். இதை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு அவர்களுக்கு சட்டரீதியாக உரிமை உண்டு. இந்த விஷயத்தில் தலையிட்டு 3 அமைச்சர்கள் குழுவை அமைத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி. கோவை மாவட்டத்தில் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து ஆக்கிரமிக்கும் போக்கு அதிகளவில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறையினர் பழங்குடியிருனக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து நவீன விடுதிகளை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரப்பட்டு உள்ளது. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆனால் அனைத்திலும் அரசியல் செய்கிறீர்கள். கடவுளையாவது விட்டு வையுங்கள் என உச்சநீதிமன்றம் கண்டித்து விசாரணை குழுவும் அமைத்து உள்ளது. அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டது. நிறைய பிரச்சனைகள் உள்ள நிலையில் மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
