மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவரை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1ம் திகதி 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பை வீழ்த்தி ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் பெரும்பாலன ராக்கெட்டுகள் அதன் இலக்கை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், இதற்கான பதிலடி நிச்சயம் வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், வளைகுடா அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவலில், வளைகுடா அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும், அதன் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நடவடிக்கை முழு குழுவும் எடுத்த நடவடிக்கையாக ஈரான் கருதும், மேலும் அதற்கான பதிலடியும் நிச்சயம் வழங்கப்படும் என்று ஈரான் தெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.