காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து 90க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் பெரும்பாலான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இந்த ராக்கெட் தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராக்கெட் ஏவுதளம் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
