ஸ்காபுறோ ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக நடைபெற்றது
கனடா- ஸ்காபுறோ நகரில் இசை ஆசிரியை ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களை குருவாகக் கொண்டு இயங்கிவரும் ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக கடந்த சனிக்கிழமை 16ம் திகதி மாலை இசைக் கலா மன்றத்தின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் தொகுப்பாளராக திருமதி கோதை அமுதன் சிறப்பாக பணியாற்றினார். விழாவின் பிரதம விருந்திதராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்து இசை நிறுவனத்தையும் குருவையும் மாணவ மாணவிகளையும் வாழ்த்திச் சென்றார்.
பல வருடங்களாக இயங்கிவரும் வீணை வாத்திய இசை பயிற்சி நிறுவனம் என்ற வகையில் தனது நிறுவனத்தை சிறந்த முறையில் நடத்தி வரும் ஆசிரியை குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களின் மாணவிகளின் பெற்றோரின் ஒத்துழைப்பு வழக்கம் போல அதிகளவில் இந்த வருடமும் இருந்தது என்று பிரதம விருந்தினர் அவர்கள் தனது குறிப்பிட்டார்.
ஆரம்ப வகுப்பு மாணவிகளின் இசை சமர்ப்பணம் நிகழ்ச்சிகள் தொடக்கம் சிரேஸ்ட வகுப்பு மாணவிகளின் வீணை இசைச் சமர்ப்பணம் வரையும் அழகாகவும் இனிமையாகவும் நேர்த்தியாகவும் இருந்ததை தொடர்ச்சியாக கவனித்த இரசிகர் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள்.
அனைத்து வீணை இசை வாத்திய சமர்ப்பணங்களுக்கும் ‘மிருதங்க வாருதி’ வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களின் மாணவர்கள் தங்கள் லய வாத்தியக் கருவிகள் மூலம் மெருகூட்டிச் சென்றார்கள் என்றால் அது மிகையாகாது.
மொத்தத்தில் அன்றைய ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலானது சில வேளைகளில் பார்வையாளர்களுக்கு இடையில் வீணைக் கச்சேரிகளை ரசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருந்திருக்க வேண்டும்.
விமர்சனம்:- சத்தியன்
































