உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 1031வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் குர்ஷ்க் மாகாணத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.
