பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் காவல்துறை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்து அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்லுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை புறக்கணிப்பது போன்றவையாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
























