இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை. இந்த நிலையில், ‘வாடிவாசல்’ படத்தை தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தள பக்கத்தில், அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்த பதிவேற்றத்தால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‘வாடிவாசல்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் தனுசை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
