டில்லியில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் டில்லி, எம்.பி. ரோடு, இன்ஸ்டிட்யூ ஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார்- 6, பிளாட் எண்கள். 15 மற்றும் 22” என்ற முகவரியில் அமைந்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட டில்லி அ.தி.மு.க. அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். – புரட்சித் தலைவி அம்மா மாளிகையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவால் டில்லியில் அ.தி.மு.க. அலுவலகம் அமைப்பதற்காக 21.2.2012 அன்று 10,850 சதுர அடி கொண்ட இடம் மத்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. ஜெயலலிதாவால் 5.10.2015 அன்று அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான 13,020 சதுர அடி கொண்ட இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடி என 4 தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது. டில்லியில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். – புரட்சித் தலைவி அம்மா மாளிகை” கழக அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் டில்லி மாநிலக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.