அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி வைத்து நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘கூரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘கூரன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியிருந்தார்.’கூரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளர் மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டு இத்திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் என்றார். “கூரன்” படம் வரும் 28ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. “கூரன்” படத்தின் மோஷன் பதாகையை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், “கூரன்” படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு நாய் அதன் குட்டியை விபத்தில் பறிகொடுகிறது. அந்த விபத்திற்கு காரணமானவர்களின் மீது நாய் புகாரளிக்கிறது. இந்த வழக்கை எஸ்.ஏ. சந்திரசேகர் நீதி மன்றத்தில் வாதாடுகிறார். இந்த காட்சிகள் முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ளது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
