முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் புதியக்கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கையின் பலன் தமிழ்நாட்டு எளிய மக்களின் குழந்தைகளுக்கு சென்றடையக்கூடாது என்பது போல திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராடுவது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உகந்ததல்ல. புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என குறிப்பிட்டு திணிக்கவில்லை. தாய்மொழியை முதன்மைப்படுத்தியும், ஆங்கிலமும், வேறு எந்தவொரு மாநிலத்தின் பிரதான மொழியையும் விருப்பத்தேர்வாக தமிழ் மாணவர்கள் கற்கலாம் என்கிறது. மேலும், பிற மாநிலங்களில் மூன்றாவது விருப்ப மொழியாக மாணவர்கள் தமிழை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்குகிறது. சீன நாட்டினர் சீன மொழி, பிலிப்பைன்ஸ் நாட்டினர் பிலிப்பினோ மொழி, ரஷ்யா நாட்டினர் ரஷ்ய மொழி, பிரான்ஸ் நாட்டினர் பிரெஞ்ச் மொழியை, இங்கிலாந்து நாட்டினர் ஆங்கில மொழியை என சர்வதேச அளவில் மக்கள் தங்களது நாட்டிற்கேற்ற மொழியை பேசும்போது, இந்தியாவில் அதிகமாக பேசப்படுகின்ற இந்தியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று புரியவில்லை.
மும்மொழி கொள்கையை எதிர்க்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஏன் தொண்டர்களின் பிள்ளைகள் கூட மும்மொழி கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயில்கிறார்கள். அரசியல்கட்சி தலைவர்கள் நடத்தும் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக உள்ளது. கல்வி அனைவருக்கும் பொதுவானது. தனியார் பள்ளி மாணவனுக்கு ஒரு சட்டம், அரசு பள்ளி மாணவனுக்கு ஒரு சட்டமா? இரு மொழிக்கொள்கைதான் வேண்டும் என்றால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இரு மொழி தான் நடைமுறையில் இருக்க வேண்டும். ஆனால், ஏழை மாணவ, மாணவிகளுக்கு இரு மொழியையும், வசதி படைத்த மாணவ, மாணவிகளுக்கு மும்மொழியையும் பயிற்றுவிப்பது எந்த விதத்தில் நியாயம். எனவே, அனைவருக்கும் சமமான, வருங்கால வளர்ச்சிக்கு ஏற்ற ஒரே விதமான கல்வி, மும்மொழி கொள்கையாக இருக்கட்டும். அதுவே மாணவர்கள் வாழ்க்கைக்கு பயன் தரும். தங்களது அரசியல் நோக்கத்திற்காக இளைய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி உரிமையையும், வாய்ப்பையும் தவிர்க்க வேண்டாம் என தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.