கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் மறுபதிப்பு செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தின் மூன்றாம் பாகமான ‘திரிஷ்யம் 3’ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார். 2025ம் ஆண்டு ‘திரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜித்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருடம் உள்ள புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். டுவிட்டில் “கடந்தகாலம் அமைதியாகவே இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.
