பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் ரஷிய தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தூதரகத்தில் திடீரென இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு ஏறக்குறைய 30 தீயணைப்பு வீரர்கள் சென்றனர். இதுபற்றி டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தூதரக பூந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் சிலர் 2 குண்டுகளை வீசி சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது. அந்த பகுதியில், கார் ஒன்று நின்றிருந்தது. அது வேறொரு பகுதியில் இருந்து திருடப்பட்து என கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, மார்சே நகரில் அமைந்த ரஷிய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும். இதுபற்றி பிரான்ஸ் உடனடியாக, முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ரஷிய அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என கூறினார். இந்நிலையில், பிரான்சில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதற்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்கள் யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இதுபற்றி பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
