தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ். சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ். மணி, ஏ.என். பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்திரைசெல்வி, வி. நாகு, பி. சீதாலட்சுமி, ஆர்.எஸ். ஜெயலதா, திரு. எஸ். ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார். தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் ப. ரங்கராஜ், திரு. வளப்பக்குடி வீரசங்கர், முனைவர் இரா. சீனிவாசன், திரு. செ. நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் மொத்தம் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்குதமிழ்நாடு முதலமைச்சரால் இன்றையதினம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கவிதா ராமு, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.