தெகிடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். இதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். போர் தொழில் திரைப்படம் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு வெளியான ப்ளூ ஸ்டார் மற்றும் எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படங்களை மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் இவர் தமிழில் ரஜினி முருகன், பைரவா, சண்டக்கோழி 2, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தி துறையில் அறிமுகமானார்.
தமிழில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் திரையரங்கிள் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓடிடியில் திரைப்படத்தை கொண்டாடினர். அடுத்தது கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது அடுத்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை தயாரிக்க போவதாகவும் அந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் எனவும் கூறப்படுகிறது. இதுக்குறித்த மற்ற விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.