லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய, சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் இருந்து படைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யங் ஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா – சீனா இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு ரஷியாவின் கசான் நகரில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப்பின் இந்தியா, சீனா இடையேயான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பல்வேறு கட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பான முடிவுகளை பெற்றுள்ளன’ என்றார்.
