அர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், கட்டிடங்களை சுற்றி மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இதுபற்றி மாகாணத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேவியர் அலன்சோ வெளியிட்ட அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட பயணங்களை அதிபர் ஜேவியர் மிலெய் ரத்து செய்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி குழுக்கள் செல்வது உறுதி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சூழலில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
