பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் அடையாளமும், பெருமையும் தேடித்தந்த காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய தி.மு.க. அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயரே நீடிக்க வேண்டும். அவர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்டும் முயற்சியை பா.ம.க. அனுமதிக்காது. தமிழக அரசு அதன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை பா.ம.க. நடத்தும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
