நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்து வந்தது. இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் படம் தொடர்பாக புதிய பதாகையும் வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.