பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அந்த வகையில் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார். சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல பாடகி ஷாலினி சிங் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
