சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. ஆனால், இந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம் (6 லட்சம்) என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. அதிபராக இருந்த பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர். பல இடங்களை கைப்பற்றி முன்னேறினர். இதனால், இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்து வந்த அதிபர் பஷார் அல்-ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடினார். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்படி, சிரியாவின் தெற்கே தேரா மாகாணத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியே தாக்குதல் நடத்தியது. இதில், 2 பேர் பலியானார்கள். 19 பேர் காயம் அடைந்தனர்.
