விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி நிலையத்திலேயே தங்க நேர்ந்தது. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர். எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.
இதனையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் குரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது. இதன்பின்னர் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, குரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர்.குரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் குரு டிராகன் விண்கலம் இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் நான்கு நிலைகளை கடந்து பூமிக்கு வர வேண்டும். இவற்றில் முதல் நிலையில் விண்கலம் தயாராதல் நடைபெறும். இதன்பின்னர் 2 மணிநேரம் கழித்து, 2-ம் நிலையின்படி விண்கலம் பிரிதல் நடைபெறும். 3-ம் நிலையில் விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைத்தல் பணி நடைபெறும். இதனால், பூமிக்கு திரும்பும் பணி எளிமையடையும். இதனை தொடர்ந்து, 4-ம் நிலையில் விண்வெளி வீரர்கள் தரை இறங்குதல் நடைபெறும். இதன்படி, அவர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்தில் அமர்ந்து உள்ளார். டிராகன் விண்கலம், 4 நிலைகளை கடந்து பூமிக்கு திரும்பும் சவாலான பணி தொடங்கி நடந்து வருகிறது.