(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(20-03-2025)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 20ம் திகதி அன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
-மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பொலிஸ் பாதுகாப்புடன் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை (20) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.
கட்சியின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் மன்னார் நகரசபை,நானாட்டான் ,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளனர்.
இதேவேளை கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வியாழக்கிழமை(20) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் மன்னார் நகர சபை,மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் போட்டியிட வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி வியாழன் அன்று (20) வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தலைமையில் மன்னார் நகர சபை, நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளனர்.
இதேவேளை மன்னார் நகரசபை மற்றும் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக 20ம் திகதி அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் அபூபக்கர் தர்சின் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட20ம் திகதி அன்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தலைமையில் மன்னார் நகர சபை,,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்களாக 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.