(கனகராசா சரவணன்)
இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ‘ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்’ எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி 24-03-2025 அன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கனிஸ்ட சேவையாளர்களின் தொழிலாளர் சங்கம் மற்றும் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவர் இர்பான் ஏற்பாட்டினையடுத்து பிரதான பஸ்நிலையத்தில் இருந்து கச்சேரிவரை பேரணியாக செல்வதற்கு திட்டமிட்ட நிலையில் தேர்தல் விதிமுறையில் செல்வதற்கு பொலிசார் அனுமதி மறுத்ததையடுத்து காந்தி பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர்.
இதனையடுத்து நாட்டில் நிலவும் யானைப் பிரச்சனைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளைப் பராமரிப்பதற்கென நாடு முழுவதும் 4731 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டு தற்போது வரை 3530 உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமைபுரிகின்றனர் அவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு சுமார் 5 வருடங்கள் ஆகியும்அடிப்படை வசதியின்றி நிரந்தரம் நியமனம் இன்றி இரவு பகலாக இற்றைவரை மாதாந்தம் 22500 ரூபாய் பயிற்சி கொடுப்பனவை மாத்திரம் பெற்று கொண்டு கடமையாற்றி வருவதாகவும்
மனித யானை மோதல்களைக் குறைக்க நாங்களும் பங்களிப்பவர்கள், எங்கள் பிரச்சனை அதிமேதகு ஜனாதிபதிக்கு, எங்கள் பிரச்சனையை ஜனாதிபதி அவர்களால் மாத்திரமே தீர்க்க முடியும், நிரந்தர நியமனம் இன்றி கடந்த 4 வருடங்களாக மாதம் 22500 ரூபாவுக்கு நாங்கள் வேலை, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இந்த ஆர்பாட்டத்தை கண்காணித்து கொண்டதுடன் சுமார் 2 மணித்தியாலம் ஆர்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று பழைய கச்சேரியில் அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.