அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து ‘ஓஜி சம்பவம்’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர். அடுத்ததாக 2-வது பாடல் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “குட் பேட் அக்லி என்பது தமிழில் இருந்து மிகவும் பரபரப்பான படம். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் முதல் நாளில் வசூலித்ததை விட ‘குட் பேட் அக்லி’ அதிக வசூல் செய்து சாதனை படைக்கும். இது என்னுடைய வார்த்தைகள் அல்ல தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்களின் வார்த்தை” என்று தெரிவித்துள்ளார்.