பு.கஜிந்தன்
சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்த ராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவனந்தராஜா தலைமையில் இடம் பெற்றபோது சமூகமட்ட பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுன்னாக நிலத்தடி நீரில் நொதேன் பவர் தனியார் நிறுவனத்தினால் வெளியேற்றப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்துக்கு கீழ் இறக்கப்பட்ட நிலையில் மக்களின் குடிநீர் கிணறுகள் தொடக்கம் விவசாய கிணறுகள் வரை கழிவு எண்ணெய் தாக்கம் உணரப்பட்டது.
சிலர் அதனை மறுத்து வந்த போதும் இறுதியில் உண்மை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சுன்னாக பிரதேச மக்களின் குடிநீர் கிணறுகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரியாது.
ஏனெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் கிணறுகள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை எடுத்ததாக நாங்கள் அறியவில்லை.
அது மட்டுமல்லாது மருதனார் மடப் பகுதியில் அமைந்துள்ள வாகனங்கள் சுத்திகரிக்கும் நிலையத்தில் அதிகளவிலான அரச நிறுவனங்களின் வாகனங்கள் சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது.
குறித்த சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி வளமான விவசாய நிலங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்ற பகுதியில் குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் கழிவுகள் அங்கு செல்கின்றது என்பது தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது.
இவ்வாறான நிலையில் முன்பு ஏற்பட்ட பாரியாய அனர்த்தம் போன்று எதிர்காலத்தில் கழிவு எண்ணெயினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர் சுன்னாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தாக்கம் தொடர்பில் நான் நன்கு அறிவேன்.
ஆகையால் பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கும் நிலையில் நீர்வளங்கள் சபை அதிகாரிகள் சுன்னாணாகப் பகுதியில் உள்ள 5 குடி நீர் கிணறுகளின் நீர் மாதிரிகளில் எண்ணெய் படலம் இருக்கிறதா என்பது தொடர்பில் பரிசோதனை அறிக்கையை பிரதேச அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.
அதேபோன்று வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என அறிக்கை சமர்ப்பிப்பதோடு சுற்றாடல் அதிகார சபையினால் குறித்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உடுவில் பிரதேச சபைச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள் கிராம சுவையாளர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.