பு.கஜிந்தன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு மீது கேள்விகளை எழுப்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இவ்வாறான நாகரிகமற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும். சக மாணவரை உடல்ரீதியாகவும் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த பயங்கரமான கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.
மாணவர் மீது நடக்கும் எந்தவொரு வன்முறையையும் தடுக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய அதிகாரிகள் உடனடியாக முந்திய சம்பவங்களை விசாரித்து, குற்றவாளிகளை தக்க தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
மாணவர்களை சித்திரவதை செய்யும் மரபு இனி எதுவும் நடக்கக்கூடாது. சக மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கீழ்த்தரமான செயல்களை ஒழிக்க தேவையான கடுமையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.