ந.லோகதயாளன்.
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகள் விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 50 மாணவர்களிற்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிர்ச்சியான புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும் 50 மாணவர்களிற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளில் 3 கிலோ மீற்றருக்குள் வேறு பாடசாலையிருப்பின் அவற்றை மூடுவதற்கு தற்போதைய அரசு திட்டமிடுகின்றது. இதற்கான கணக்கெடுப்பில் வடக்கில் தற்போதுள்ள 13 கல்வி வலயங்களிலும் 981 பாடசாலைகள் இயங்குகின்றன.
இவ்வாறு இயங்கும் 981 பாடசாலைகளில் 2 லட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கே 981 பாடசாலைகள் உள்ளபோதும் அவற்றில் 454 பாடசாலைகளில் 100ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இதிலும் மிக மோசமான நிலைமையாக 266 பாடசாலைகளில் 50ற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றமையும் மாகாண கல்வி அமைச்சினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
266 பாடசாலைகளில் 50ற்கும் குனைவான மாணவர்கள் கல்வி கற்கின்றபோதும் 3 கிலோ மீற்றர் தூரத்திற்குள் வேறு பாடசாலைகள் இல்லாத நிலை, கடல் கடந்த சூழல், விசேட தேவை என்பவற்றை கருத்தில்கொண்டு மூடப்பட வேண்டிய பாடசாலைகளிற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மூடப்படும் நிலையில் வடக்கில் 56 பாடசாலைகள் இனம் காணப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 50ற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 41 பாடசாலைகளும் காணப்படுவதோடு வவுனியா மாவட்டத்தில் 72 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 பாடசாலைகளும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் வடக்கில் மூடப்படும் நிலையில் காணப்படும் 56 பாடசாலைகளிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது