தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். தெரிந்துகொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது. தேமுதிகவை பொறுத்தவரைக்கும் ஏப்ரல் 30-ந்தேதி செயற்குழு – பொதுக்குழு நடத்த இருக்கிறோம். அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்காகத்தான் தேமுதிக நிர்வாகிகள் வந்துள்ளனர். தேமுதிக-வின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம். செயற்குழு-பொதுக்குழு நடந்துமுடிந்தவுடன் யாருக்கெல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும். 6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஒருவருட காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்தமுறை மிகவும் யோசித்து, நிதானமாக தான் முடிவு எடுப்போம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம். கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.
தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன். அமைச்சர் பொன்முடியின் பேச்சு கேவலமானது. அசிங்கமாக பார்க்கிறேன். பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.