ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசி கொண்டனர். அப்போது, அமெரிக்காவும், ஈரானும் அணு ஆயுத பயன்பாடு பற்றி அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளன. ஓமனின் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர பின் ஹமத் அல்-புசைதி என்பவரை தலைமை மத்தியஸ்தராக கொண்டு, ஈரானிய வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது, ஆக்கப்பூர்வ முறையில் மற்றும் பரஸ்பர மதிப்பு அடிப்படையில் நடந்துள்ளது என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விட்டார். இந்த சூழலில், பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒரு முடிவு ஏற்பட்டு உள்ளது.
