மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை.
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(16-04-2025)
மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் 16ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனிம மண் அகழ்வு திட்டங்களை நிறுத்துமாறு கோரி பல வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக இந்தத் திட்டங்களை நிறுத்துவதாக ஜே.வி.பி யின் சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக எம்மைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தன.
ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.காற்றாலை திட்டம் டைட்டானியம் அகழ்வு கரையோர கனிம மணல் அகழ்வு, இம்மூன்று திட்டங்களாலும் மன்னார் தீவுப் பகுதி பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் என பல துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் வேளையில் அரசு அதனைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்த முனைகிறது.
மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம். கடந்த காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் என்றும் இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வந்த ஜனாதிபதி அதே வேலையை அவரும் முன்னெடுப்பது வெட்கக்கேடான அரசியல் செயல்பாடு ஆகும்.
நடைமுறைச் சாத்தியமற்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்று அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றாடுகின்றது அரசு. ஆகவே மூன்றாவது தேர்தலிலும் போலியான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற முனைகிறீர்களா? நாளை மன்னாருக்கு வருகை தர உள்ள தாங்கள் இம் மூன்று திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும்.
இல்லையேல் நீங்கள் குற்றம் சாட்டிய படி ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாதவராகவே காணப்படுவீர்கள்.
அரசியலிலும் அறம் மிக முக்கியம். நீண்ட காலத்துக்கு எவரையும் ஏமாற்ற முடியாது. மீண்டும் மீண்டும் இந்த மக்களை ஏமாற்றி வாக்கு பெற முனையாதீர்கள்.நீங்கள் பின்பற்றுவதாக மேலிடையிடும் இடதுசாரித்துவத்துக்கே அவமானமும் இழுக்கும் ஆகும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி.
இப்படி மன்னாரில் உள்ள இம்மூன்று திட்டத்தையும் இரத்து செய்ய வேண்டும் இல்லையேல் மக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள் என்பது இத்தேர்தல் தங்களுக்கு உணர்த்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.