நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டசபையில் நேற்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில நலனில் அக்கறை இல்லாத அதிமுகவும் அதன் கூட்டாளியாக பாஜகவும் வெளிநடப்பு செய்தன. இதன் மூலம் டெல்லி சர்வாதிகாரத்தின் அடிமைகள் நாங்கள் என அதிமுக, பாஜக உறுப்பினர்கள் தங்களை வெளிப்படுத்தினர். மாநில நலன் மற்றும் மாநில சுயாட்சி சார்ந்து திமுக போராடியபோதெல்லாம் அண்ணா காலத்தில் இருந்தே “பிரிவினைவாதம் பேசுகிறது திமுக” என அவதூறு பரப்பினார்கள். இப்போது அதே அவதூறை மோடி அமித்ஷாவின் தமிழ்நாட்டு புதிய ஏஜெண்ட் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். “மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினைவாதத்தை முதல்-அமைச்சர் தூண்டுகிறார்” என நயினார் நாகேந்திரன் பேசியதில் இருந்தே அண்ணா திமுகவில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதை காட்டுகிறது. “மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும்” என்று சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதை கேட்டிருந்தாலே அவரின் நல்ல நோக்கம் புரிந்திருக்கும். டில்லி எஜமானர்கள் கோபித்துக்கொண்டால் பதவிக்கு ஆபத்து நேருமோ என்ற பதற்றத்தில் அவசரமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, அவதூறு கருத்தை ஊடகங்கள் மூலம் நயினார் நாகேந்திரன் பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது. “திமுக பிரிவினைவாதம் பேசுகிறது” என திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய 50 ஆண்டுக் கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிட்டு, மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கம் திமுகவுடையது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம் என்பதால் தமிழ்நாட்டு உரிமைகளை பறித்தால் முன்பைபோல பாஜக 2026 தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.