வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது. அதன்படி மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான ஜெனரல் சொலிட்டர் “மத்திய அரசு சார்பில் வக்பு திருத்த சட்டத்தின் சில சரத்துகளை பார்த்து உத்தரவு பிறப்பிக்க கூடாது. இடைக்கால தடையும் விதிக்கக் கூடாது. ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம். ஒரு வாரத்தில் எதுவும் ஆகிவிடாது” என வாதிட்டார். அதற்கு நீதிபதிகள் “வக்பு வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் உச்சநீதிமன்றம் விரும்புகிறது. நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவும் இப்போது பிறப்பிக்கவில்லை. புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. இடைக்கால நிவாரணமாக சம்பந்தப்பட்ட தரப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
